வருகடலை - 2 -விஜயகாந்த் தனித்து போட்டி

Sunday, September 25, 2011

வருகடலை - 2

விஜயகாந்த் தனித்து போட்டி


இந்த உள்ளாட்சி தேர்தலில், விஜயகாந்த் தனித்து போட்டியிடப்போவதாக கூறியிருக்கிறார். இது எந்த அளவுக்கு நடக்கும் என்பதை தேர்தல் நடக்கும் வரை உறுதியாக கூற முடியாது. ஏன் என்றால் இது போல் தான் சட்டசபை தேர்தலிலும் ஏதேதோ நடக்கும் என எதிர்பார்த்தால் ஒன்றுமே நடக்கவில்லை.

இவ்வளவு நாள் அவர் அமைதி காத்து வந்தது "இலவு காத்த கிளி போல்" ஆகிவிட்டது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் எப்படியும் ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கைக்கு முன் கூட்டணி கட்சியினர் எல்லாம் கண்ணுக்கு தெரிந்து இருக்க மாட்டார்கள். அதனால் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்து விட்டார்.

இந்த தேர்தலில் ஒரு நல்ல விசயம், அனைத்து பெரிய கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இதனால் அவர்களது செல்வாக்கு தனித்தனியாக எவ்வளவு உள்ளது என்பது தெரிந்துவிடும். இதில் சுவாரசியமான விசயம், காங்கிரஸை யாருமே கண்டுகொள்ளவில்லை!? இவர்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்காவது ஆட்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே?

இப்படி நகைச்சுவை காட்சிகள் நடந்து கொண்டிருக்க, நடிகர் விஜய் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. தன்னை கூப்பிட்டு கூட்டணியில் சேர்த்து கொள்ளும் என இன்னமும் நம்பிக்கொண்டு இருக்கிறார்? பார்ப்போம் இன்னும் என்ன என்ன நடக்கிறது என்று?


அசாருதீன் பையன் மரணம் - நமக்கு உணர்த்தும் பாடம்.

அசாருதீன் மகன் மரணமடைந்ததை நாம் அனைவரும் அறிவோம். தனது மகன் விரும்பியதற்காக ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கி கொடுத்துள்ளார். இந்த பைக் 1200 cc சக்தி வாய்ந்தது. மணிக்கு 300 கி.மீ. தூரம் செல்லும். ஆனால் அந்த பைக்கை ஓட்டுவதற்கு பையனுக்கு தகுதியான வயதை அடையவில்லை என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த தகுதி இல்லாததால் அவ்வளவு சக்தி வாய்ந்த பைக்கை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலாமல் விபத்துக்கு ஆளாகிவிட்டான். இதுவே இவன் மோதி வேறு யாருக்காவது விபத்து நிகழ்ந்து இருந்தால்?

ஏன் இவ்வளவு அவசரம் அப்படி வண்டியை ஓட்டுவதற்கு!. இப்பொழுது யாருக்கு நஸ்டம்? இது ஏதோ அசாருதீன் மட்டும் செய்த தவறு இல்லை. நாம் அனைவருமே இது போல ஏதாவது ஒருவிதத்தில் தவறு செய்து கொண்டு இருக்கிறோம். எப்படி என்கிறீர்களா? நாம் செய்யாததை நமது குழந்தைகள் செய்யும் பொழுது அதனை ரசிக்கிறோமே தவற, அதற்குண்டான தகுதியும் பாதுக்காப்பு வழிமுறைகளையும் சொல்லிக்கொடுப்பதில்லை!

இந்த டீன் ஏஜ் எதனையும், சோதனைகளையும் செய்து பார்க்கத்தூண்டும். பெரியவர்கள் தான் அவர்களுக்கு பக்குவமாக எடுத்துக்கூற வேண்டும். ஆனால் எவ்வளவு பேர் அதனை செய்கிறார்கள்?

இது மட்டுமல்லாமல், இந்த பைக்கை வாங்கியதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. பைக்கை ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு செருப்புக்கடைக்காரர் வாங்கியுள்ளார். அவரது பெயரில்தான் இது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பைக்கை அசாருதீனின் பையன் ஓட்டி விபத்துக்குள்ளாகி இறந்துள்ளான். லைசன்ஸ் இல்லாத ஒருவருக்கு அதுவும் அந்த வயதையே எட்டாத ஒருவருக்கு எப்படி இந்த பைக்கை ஓட்ட கொடுத்தார் என்று அவரிடம் போலீசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

வரி ஏய்ப்பு செய்வதறகாக இது போல் ஏதாவது ஒருவர் பெயரில் இறக்குமதி செய்வது என்பது எல்லா பெரிய பணக்காரர்களும் செய்வது. இப்பொழுது அதுவும் அசாருதீனுக்கு பிரச்சனை ஆகி உள்ளது.

பாலாற்றில் அணைக்கட்ட கேரளா 550 கோடி ஒதுக்கியது

கேரளாவில் புதியதாக வந்த காங்கிரஸ் அரசு பாலாற்றில் அணை கட்ட 550 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. அம்மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது போன்ற பொதுவான செயல்பாடுகளில் ஒன்றாக உள்ளன. ஆனால் தமிழ் நாட்டில் ஒரு கட்சி செய்ததை அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறுத்துவது அல்லது அதற்கு எதிராக செயல்படுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.

இதனைப்பற்றி பேச ஆரம்பித்தால் வேறு எங்காவது சென்று விடுவோம். அந்த அணை கட்டக்கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்புக்கூறுவதை கேரளா மதிப்பதாகவே தெரியவில்லை. அவர்கள் நினைத்ததை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இரு மாநில மக்கள் ஒற்றுமையாக இருப்பது பிடிக்கவில்லை போலும். அவர்கள் வேலையை ஆரம்பிக்கிறேன் என்றதும், இங்கு கேரளாவுக்கு மின்சாரம் கொடுக்க கூடாது எனவும், காய்கறி போன்ற அத்தியாவசியமான பொருட்களை கொண்டுசெல்லும் லாரிகளை தடுத்து நிறுத்துவார்கள். இதனால் பாதிக்க பட போவது இரு மாநில மக்கள் தான். இதனை ஆளும் அரசுகள் மனதில் கொள்ள வேண்டும்.

வாய் கிழிய பேசும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற காங்கிரஸார் கேரளாவின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து சொல்லி, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

புதிய பாடல்கள்
நேற்று 7ம் அறிவு பாடல்கள் கேட்டேன். கேட்ட உடனே பிடிக்கும் வகை இல்லை. பல்வேறு கால கட்டங்களில் நடப்பது போல் படம் இருக்கும் போல் இருக்கிறது. 80-90 களில் உள்ள சோக பாடல் போன்று ஒன்று, ஒரு சைனீஸ் பாடல், இப்போது இருப்பது போல் ஒன்று என்று ஒவ்வொன்றும் ஒவ்வொறு விதம்.

படம் இப்போதே எதிர்பார்ப்புக்கு உள்ளாகி உள்ளது. அதனை முருகதாஸ் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என நம்பலாம்.

மயக்கம் என்ன? தனுஸ் நடிக்கும் செல்வராகவனின் படம். செல்வராகவனின் படம் என்றாலே பாடல்கள் நன்றாக இருக்கும். இதில் இரண்டு பாடல்கள் வித்தியாசமாக உள்ளது. தனுஸ் மற்றும் செல்வராகவன் இணைந்து வேறு பாடி(பேசி)யுள்ளனர்.

எங்கேயும் எப்போதும்

எல்லோரும் பாராட்டுகிறார்கள். விகடன் இதற்கு 50/100 மதிப்பெண்கள் கொடுத்துள்ளது. இதற்கு மேல் இதனை நான் தனியாக பாராட்ட வேண்டியதில்லை. ஆரம்பத்தில் 4 மணி நேரத்திற்கு முன்பு என்று ஃபிளாஸ்பேக், அதில் 6 மாதத்திற்கு முன்பு என்று ஃபிளாஸ்பேக் என்று சற்று புரிய தாமதமானது. ஆனால் போக போக எல்லோரையும் ஒன்ற வைத்துவிடுகிறது. ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு அதற்கு சரியான திரைக்கதை எழுதி உள்ளனர்.

அனைவரது நடிப்பும் கன கச்சிதம். ஜெய் வெட்கப்படும் இளைஞனுக்கு சரியாக பொருந்துகிறார். அஞ்சலி தற்போதய பெண்களை சரியாக வெளிபடுத்தி உள்ளார். அனன்யா மற்றும் நடிப்பும் நன்றாக உள்ளது. பாடல்கள் இரண்டு மிக அருமை.

ஒளிப்பதிவு மற்றும் அந்த ஆக்ஸிடண்ட் ஆகும் காட்சியின் கிராபிக்ஸ் மிக அருமை. நன்றாக செய்துள்ளனர்.

எனது 4 வயது பையனுக்கு தான் பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. பாடல் காட்சிகளை மட்டும் ரசித்து பார்த்தான். மற்றவற்றை பார்க்கவே இல்லை. அவனுக்கு வேங்கை, மங்காத்தா போன்ற சண்டை, பாடல் காட்சிகள் உள்ள படங்கள் தான் பிடிக்கிறது.

முருகதாஸுக்கும், ஃஃபாக்ஸ் தயாரிப்புக்கும் தமிழில் கிடைத்த முதல் வெற்றி. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு தெரியுமா - தமிழ் நாட்டில் தொடர் கொலை, கொள்ளை நடப்பது?

Wednesday, September 14, 2011

ஜெயலலிதாவுக்கு தெரியுமா - தமிழ் நாட்டில் தொடர் கொலை, கொள்ளை நடப்பது?




ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற ஒரு வாரத்தில் "தமிழ் நாட்டில் இனி ரவுடிகளின் தொல்லையே இருக்காது. நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடிவிட்டனர் என்றார். ஏதோ இவரிடமோ அல்லது இவரது அரசுக்கு சொல்லிவிட்டு அவர்கள் சென்றது போல்.



ஆனால் இப்பொழுது நடப்பதோ முற்றிலும் நேர் மாறாக உள்ளது. ஏகப்பட்ட கொள்ளைகள், கொலைகள். நேற்று பரமக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி. நேற்று கொள்ளையர்களால் சென்னையில் நடிகை விசித்ராவின் தந்தை கொல்லப்பட்டிருக்கிறார். இது போன்றவற்றிக்கு ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டும்.



இதனை தட்டிக்கேட்க வேண்டிய எதிர் கட்சி இருக்கிறதா என்றே தெரியவில்லை? சட்டசபையில் , பன்ருட்டி எம்.ஜி.ஆர் பாடல் பாடி கை தட்டு வாங்கி கொண்டு இருக்கிறார். இதற்காகவா இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? இதனை நினைதால் வேதனையாக இருக்கிறது.



சென்ற ஆட்சியில் காங்கிரஸ் இது போல் தான் செயல் படாமல் இருந்ததால் இன்று இருக்கும் இடமே தெரியவில்லை. தி.மு.க. வும் ஆட்சியை இழந்திருக்கிறது. இதனை எல்லாம் ஜெயலலிதா கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பற்றி மத்திய அரசின் முடிவு

Tuesday, September 13, 2011

கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பற்றி மத்திய அரசின் முடிவு




சென்ற இரு வாரங்களுக்கு முன்பு எல்லோரும் பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரத்தை பார்த்திருப்போம். அது மத்திய அரசின் முடிவின் காரணமாக இனி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படமாட்டாது என்று. வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்களை எடுத்து செல்ல தாங்களே பைகளை கொண்டுவர வேண்டும் இல்லை கடைகளில் வாங்கினால் அதற்கு தனியாக பணம் கொடுத்து வாங்க வேண்டும்.



கடைகளில் இது வரை இலவசமாக கொடுத்து கொண்டு இருந்த பைகளுக்கும் இப்பொழுது பணம் வாங்கத் துவங்கிவிட்டார்கள். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றால் அதற்கு பதிலாக பேப்பர் பைகளை கடைகள் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை அதை விட்டுவிட்டு அதற்கு பணம் வசூலிக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது சுத்த மடத்தனம்.



இது பெரிய வர்த்தக நிருவணங்களிடமிருந்து வேண்டியதை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக சொல்லி இருப்பதையே காட்டுகிறது. சென்ற வாரம் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் சென்று இருந்தேன். பொருட்களை வாங்கிவிட்டு பை இருக்கிறதா என்றார்கள்? இல்லை என்றதும் பைக்கு 10 ரூபாய் வேண்டுமா என்கிறார்கள். இது பகல் கொள்ளை. பணம் கொடுத்து வாங்கும் பையில் அவர்களது விளம்பரம் வேறு. பெரிதாக பெயரை போட்டுக்கொண்டுள்ளார்கள்.



இதனை பற்றி எங்கும் எதிர்பே வரவில்லை..மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? உங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.

வருகடலை-1

Friday, September 9, 2011


ஓணம் வாழ்த்துக்கள்

இன்று மலையாள மற்றும் ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய ஓணம் தின வாழ்த்துக்கள். இந்த நாளைப்போலவே இனி வரும் நாட்களும் இனிய நாளாக வாழ்த்துக்கள்.
எனது அலுவலகத்தில் சென்ற வாரமே ஓணம் கொண்டாடிவிட்டார்கள். தமிழக அரசு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. அதற்கு பதில் நாளை வேலை நாளாக அறிவித்துள்ளது. வெளி ஊர்களுக்கு செல்வர்கள் எப்படி இந்த விடுமுறை உதவும். அதற்கு பதில் அடுத்த சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து இருக்கலாம்.

காந்திமதி மரணமடைந்தார்


இனிய நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகை காந்திமதி புற்று நோயுக்கு சிகிச்சை எடுத்தும் பலனில்லாமல் மரணமடைந்ததாக படித்து அறிந்தேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது.


இவரது குரலே தனிரகம். எளிதில் அடையாளம் அறிந்துகொள்ள முடியும். சாதாரணமாக கதாநாயகர்களின் குரலே சினிமாவில் பிரபலமாக இருக்கும். ஆனால் அதையும் மீறி இவர் புகழ் பெற்றது பெரிய விசயம்.

மாங்காடு கோவில்

இன்று வெளியில் சென்று விட்டு மாங்காடு கருமாரியமண் கோவிலுக்கு சென்றிருந்தோம். நாங்கள் சென்றது இரவு 8 மணிக்கு அதனால் கூட்டமே இல்லை. அதனால் பொது தரிசனத்தில் சாமி பார்க்கலாம் என பார்த்தால், பொது தரிசனத்திற்கு கோவிலின் பின் பக்கதில் இருந்து வரிசையில் வர வேண்டுமாம். 20,50 ரூபாய் தரிசனத்திற்கு வாசல் அருகில் உள்ள வழியாகவே செல்லலாமாம். பொது தரிசன வரிசைக்கு விளக்கு வெளிச்சம் இல்லை, காற்றோட்டம் இல்லை ஆனால் மற்ற வரிசைக்கு ஃபேன் உள்ளது, நல்ல வெளிச்சம் உள்ளது. இது என்ன கொடுமையோ தெரியவில்லை.


தமிழ் நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள கோவில்களில் தான் இப்படி எல்லாம். குறிப்பாக திருப்பதி கோவிலில் கூட்டம் இல்லாவிட்டால் கூட்டம் சேரும் வரை உள்ளே ஏதோ பூஜை நடப்பதாக அனைவரையும் வரிசையில் காக்க வைத்து விடுவார்கள். அப்படி கஷ்டப்பட்டு சாமியை மனநிறைவுடன் பார்க்க இயலாது. 10,20 வினாடிகளில் வெளியே அனுப்பிவிடுவார்கள்.

அதுவே கேரளாவில் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலாகட்டும், சபரிமலை ஆகட்டும் பணம் கொடுத்து வித்தியாசமாக சாமியை பார்க்க முடியாது. யாராக இருந்தாலும் அனைவரும் கடவுளுக்கு முன் சமமாக இருப்பர்.

இது எப்பொழுது தான் மாறுமோ தெரியவில்லை....அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்......

ஷில்பா ராமம் - ஹைதராபாத்

ஷில்பா ராமம் - ஹைதராபாத்




அலுவலக வேலையாக 2 மாதத்திற்கு முன்பு ஹைதராபாத் சென்றிருந்தேன். அப்பொழுது ஒரு நாள் மாலை நேரம் எங்காவது வெளியே செல்லலாம் என அங்கு உள்ளவர்களை கேட்டால், நான் தங்கியிருந்ததிற்கு அருகில் இந்த ஷில்பா ராமம் எனும் பார்க் உள்ளது என்றனர். சரி போய் பார்ப்போமே என அங்கு சென்றேன். எவ்வளவு நுணுக்கமான் வேலைப்பாடுகள் , அங்கு உள்ளவற்றை பார்த்தால் நிஜ மனிதர்களை பார்பது போலவே உள்ளது.



ஹைதராபாத் செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். தவறாமல் பார்க்கவும்.



உங்களுக்காக சில புகைப்படங்கள்: