Showing posts with label விஜயகாந்த் தனித்து போட்டி. Show all posts
Showing posts with label விஜயகாந்த் தனித்து போட்டி. Show all posts

வருகடலை - 2 -விஜயகாந்த் தனித்து போட்டி

Sunday, September 25, 2011

வருகடலை - 2

விஜயகாந்த் தனித்து போட்டி


இந்த உள்ளாட்சி தேர்தலில், விஜயகாந்த் தனித்து போட்டியிடப்போவதாக கூறியிருக்கிறார். இது எந்த அளவுக்கு நடக்கும் என்பதை தேர்தல் நடக்கும் வரை உறுதியாக கூற முடியாது. ஏன் என்றால் இது போல் தான் சட்டசபை தேர்தலிலும் ஏதேதோ நடக்கும் என எதிர்பார்த்தால் ஒன்றுமே நடக்கவில்லை.

இவ்வளவு நாள் அவர் அமைதி காத்து வந்தது "இலவு காத்த கிளி போல்" ஆகிவிட்டது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் எப்படியும் ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கைக்கு முன் கூட்டணி கட்சியினர் எல்லாம் கண்ணுக்கு தெரிந்து இருக்க மாட்டார்கள். அதனால் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்து விட்டார்.

இந்த தேர்தலில் ஒரு நல்ல விசயம், அனைத்து பெரிய கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இதனால் அவர்களது செல்வாக்கு தனித்தனியாக எவ்வளவு உள்ளது என்பது தெரிந்துவிடும். இதில் சுவாரசியமான விசயம், காங்கிரஸை யாருமே கண்டுகொள்ளவில்லை!? இவர்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்காவது ஆட்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே?

இப்படி நகைச்சுவை காட்சிகள் நடந்து கொண்டிருக்க, நடிகர் விஜய் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. தன்னை கூப்பிட்டு கூட்டணியில் சேர்த்து கொள்ளும் என இன்னமும் நம்பிக்கொண்டு இருக்கிறார்? பார்ப்போம் இன்னும் என்ன என்ன நடக்கிறது என்று?


அசாருதீன் பையன் மரணம் - நமக்கு உணர்த்தும் பாடம்.

அசாருதீன் மகன் மரணமடைந்ததை நாம் அனைவரும் அறிவோம். தனது மகன் விரும்பியதற்காக ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கி கொடுத்துள்ளார். இந்த பைக் 1200 cc சக்தி வாய்ந்தது. மணிக்கு 300 கி.மீ. தூரம் செல்லும். ஆனால் அந்த பைக்கை ஓட்டுவதற்கு பையனுக்கு தகுதியான வயதை அடையவில்லை என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த தகுதி இல்லாததால் அவ்வளவு சக்தி வாய்ந்த பைக்கை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலாமல் விபத்துக்கு ஆளாகிவிட்டான். இதுவே இவன் மோதி வேறு யாருக்காவது விபத்து நிகழ்ந்து இருந்தால்?

ஏன் இவ்வளவு அவசரம் அப்படி வண்டியை ஓட்டுவதற்கு!. இப்பொழுது யாருக்கு நஸ்டம்? இது ஏதோ அசாருதீன் மட்டும் செய்த தவறு இல்லை. நாம் அனைவருமே இது போல ஏதாவது ஒருவிதத்தில் தவறு செய்து கொண்டு இருக்கிறோம். எப்படி என்கிறீர்களா? நாம் செய்யாததை நமது குழந்தைகள் செய்யும் பொழுது அதனை ரசிக்கிறோமே தவற, அதற்குண்டான தகுதியும் பாதுக்காப்பு வழிமுறைகளையும் சொல்லிக்கொடுப்பதில்லை!

இந்த டீன் ஏஜ் எதனையும், சோதனைகளையும் செய்து பார்க்கத்தூண்டும். பெரியவர்கள் தான் அவர்களுக்கு பக்குவமாக எடுத்துக்கூற வேண்டும். ஆனால் எவ்வளவு பேர் அதனை செய்கிறார்கள்?

இது மட்டுமல்லாமல், இந்த பைக்கை வாங்கியதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. பைக்கை ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு செருப்புக்கடைக்காரர் வாங்கியுள்ளார். அவரது பெயரில்தான் இது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பைக்கை அசாருதீனின் பையன் ஓட்டி விபத்துக்குள்ளாகி இறந்துள்ளான். லைசன்ஸ் இல்லாத ஒருவருக்கு அதுவும் அந்த வயதையே எட்டாத ஒருவருக்கு எப்படி இந்த பைக்கை ஓட்ட கொடுத்தார் என்று அவரிடம் போலீசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

வரி ஏய்ப்பு செய்வதறகாக இது போல் ஏதாவது ஒருவர் பெயரில் இறக்குமதி செய்வது என்பது எல்லா பெரிய பணக்காரர்களும் செய்வது. இப்பொழுது அதுவும் அசாருதீனுக்கு பிரச்சனை ஆகி உள்ளது.

பாலாற்றில் அணைக்கட்ட கேரளா 550 கோடி ஒதுக்கியது

கேரளாவில் புதியதாக வந்த காங்கிரஸ் அரசு பாலாற்றில் அணை கட்ட 550 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. அம்மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது போன்ற பொதுவான செயல்பாடுகளில் ஒன்றாக உள்ளன. ஆனால் தமிழ் நாட்டில் ஒரு கட்சி செய்ததை அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறுத்துவது அல்லது அதற்கு எதிராக செயல்படுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.

இதனைப்பற்றி பேச ஆரம்பித்தால் வேறு எங்காவது சென்று விடுவோம். அந்த அணை கட்டக்கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்புக்கூறுவதை கேரளா மதிப்பதாகவே தெரியவில்லை. அவர்கள் நினைத்ததை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இரு மாநில மக்கள் ஒற்றுமையாக இருப்பது பிடிக்கவில்லை போலும். அவர்கள் வேலையை ஆரம்பிக்கிறேன் என்றதும், இங்கு கேரளாவுக்கு மின்சாரம் கொடுக்க கூடாது எனவும், காய்கறி போன்ற அத்தியாவசியமான பொருட்களை கொண்டுசெல்லும் லாரிகளை தடுத்து நிறுத்துவார்கள். இதனால் பாதிக்க பட போவது இரு மாநில மக்கள் தான். இதனை ஆளும் அரசுகள் மனதில் கொள்ள வேண்டும்.

வாய் கிழிய பேசும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற காங்கிரஸார் கேரளாவின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து சொல்லி, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

புதிய பாடல்கள்
நேற்று 7ம் அறிவு பாடல்கள் கேட்டேன். கேட்ட உடனே பிடிக்கும் வகை இல்லை. பல்வேறு கால கட்டங்களில் நடப்பது போல் படம் இருக்கும் போல் இருக்கிறது. 80-90 களில் உள்ள சோக பாடல் போன்று ஒன்று, ஒரு சைனீஸ் பாடல், இப்போது இருப்பது போல் ஒன்று என்று ஒவ்வொன்றும் ஒவ்வொறு விதம்.

படம் இப்போதே எதிர்பார்ப்புக்கு உள்ளாகி உள்ளது. அதனை முருகதாஸ் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என நம்பலாம்.

மயக்கம் என்ன? தனுஸ் நடிக்கும் செல்வராகவனின் படம். செல்வராகவனின் படம் என்றாலே பாடல்கள் நன்றாக இருக்கும். இதில் இரண்டு பாடல்கள் வித்தியாசமாக உள்ளது. தனுஸ் மற்றும் செல்வராகவன் இணைந்து வேறு பாடி(பேசி)யுள்ளனர்.

எங்கேயும் எப்போதும்

எல்லோரும் பாராட்டுகிறார்கள். விகடன் இதற்கு 50/100 மதிப்பெண்கள் கொடுத்துள்ளது. இதற்கு மேல் இதனை நான் தனியாக பாராட்ட வேண்டியதில்லை. ஆரம்பத்தில் 4 மணி நேரத்திற்கு முன்பு என்று ஃபிளாஸ்பேக், அதில் 6 மாதத்திற்கு முன்பு என்று ஃபிளாஸ்பேக் என்று சற்று புரிய தாமதமானது. ஆனால் போக போக எல்லோரையும் ஒன்ற வைத்துவிடுகிறது. ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு அதற்கு சரியான திரைக்கதை எழுதி உள்ளனர்.

அனைவரது நடிப்பும் கன கச்சிதம். ஜெய் வெட்கப்படும் இளைஞனுக்கு சரியாக பொருந்துகிறார். அஞ்சலி தற்போதய பெண்களை சரியாக வெளிபடுத்தி உள்ளார். அனன்யா மற்றும் நடிப்பும் நன்றாக உள்ளது. பாடல்கள் இரண்டு மிக அருமை.

ஒளிப்பதிவு மற்றும் அந்த ஆக்ஸிடண்ட் ஆகும் காட்சியின் கிராபிக்ஸ் மிக அருமை. நன்றாக செய்துள்ளனர்.

எனது 4 வயது பையனுக்கு தான் பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. பாடல் காட்சிகளை மட்டும் ரசித்து பார்த்தான். மற்றவற்றை பார்க்கவே இல்லை. அவனுக்கு வேங்கை, மங்காத்தா போன்ற சண்டை, பாடல் காட்சிகள் உள்ள படங்கள் தான் பிடிக்கிறது.

முருகதாஸுக்கும், ஃஃபாக்ஸ் தயாரிப்புக்கும் தமிழில் கிடைத்த முதல் வெற்றி. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும்.